Tuesday, December 17, 2013

எனக்கு பிடிக்கவில்லை


சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, அப்போழுது நான் சிதம்பரத்தில் ஒரு அசைவ உணவகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து கொண்டிருந்தேன். அந்த சமயம் ஒரு நாள், அந்த உணவகத்தில் என்னுடன் பணிபுரியும் சைனிஸ் மாஸ்டர் புதியதாக ஒரு உணவு வகையை தயார் செய்தார். அதை சாப்பிட்டு உணவில் இருக்கும் நிறைகுறைகளை சொல்ல வேண்டும். அவர் தெளிவாக, அவ்வுணகத்தில் பணிபுரியும் நாம் யாரும் சாப்பிட வேண்டாம். உணவுத்துறைக்கு சம்பந்தம் இல்லாத, ஆனால் நம் நட்புவட்டத்தில் உள்ள ஒருவரை அழைத்து சாப்பிட சொல்லாம் என்றார். அவரின் அந்த யோசனை எங்கள் அனைவருக்கும் சரியென்று பட்டது. உடனே எங்கள் உணவகத்தின் வாயில் அருகில், கடிகார கடை வைத்து நடத்திகொண்டிருக்கும் நண்பரை அழைத்து, விபரம் சொல்லி, சாப்பிட்டுவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள், உங்கள் கருத்து எதுவாக இருந்தாலும் பராவாயில்லை, அதற்கு ஏற்றார்போல் அந்த புதிய உணவகையில் மாற்றம் கொண்டுவரலாம் என்றோம். அவரும் அதை சாப்பிட்டு விட்டு அந்த உணவின் சுவை தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால், அதற்கு பிறகு அவர் சொன்னது தான் இத்தனை வருடங்களுக்கு பிறகும் அந்த சம்பவத்ததை நான் எழுத காரணம். அவர் சொன்னது இது தான் இந்த உணவின் சுவை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அதற்காக இந்த உணவு நன்றாக இல்லை என்று அர்த்தம் எடுத்து கொள்ளதீர்கள், எனக்கு பிடிக்கவில்லை அவ்வளவு தான். இதே உணவை இங்கு வரும் வாடிக்கையாளர்கள் 10பேரிடமவாது சுவைக்க குடுத்து அதன் பிறகு முடிவு செய்யுங்கள் என்றார். ஆனால் இன்று அது எந்த விஷயமாக இருந்தாலும், அது சினிமாவாக இருந்தாலும் சரி, சாப்பாடாக இருந்தாலும் சரி, தங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் அதை அசால்டாக நன்றாக இல்லை என்று சொல்வதோடு மட்டுமில்லாமல் அதை அனைவருக்கும் பரப்பி விடுகிறார்கள் இது சரியா? உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் எனக்கு பிடிக்கவில்லை என்பதோடு நிறுத்திகொண்டால் நன்றாக இருக்கும்.

Sunday, December 8, 2013

திரைப்படம் - மனித மனதுக்கான வடிகால்! திரைப்படம் வணிகமா? கலையா? கலை சார்ந்த வணிகமா? இல்லை அது மனித மனதுக்கான வடிகால்! ஏப்படி?

கிட்டதட்ட இருபத்திமூன்று இருப்பதிநான்கு வருடங்களுக்கு முன்பு, எங்கள் வீட்டின் அப்போது இருந்த பொருளாதார சூழ்நிலை காரணமாக, (என்னுடைய தந்தை நான் 4ம் வகுப்பு படிக்கும் போதே தவறிவிட்டார்) நான் 8ம் வகுப்பு முடித்து 9ம் வகுப்பு தொடங்கும் இடைப்பட்ட 2மாத கால பள்ளி விடுமுறையில், ஒரு உணவகத்தில் சுபயோக சுபதினத்தில் வேலைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த வயதில், வீட்டின் பொருளாதார சூழ்நிலை பற்றி என் மண்டையில் ஏறவில்லை. எனவே வீட்டாரை சபித்துக் கொண்டே வேலைக்கு சென்றேன். வேலைக்கு சென்றேன் என்றால், வீட்டிலிருந்தெல்லாம் தினமும் செல்லவில்லை. 2மாத காலமும் உணவகத்தில் தங்கி வேலை செய்ய வேண்டும். வீடும் உணவகமும் நான் வசித்த ஊரான மதுரைக்குள் தான் என்றாலும், தினமும் வந்துபோக அனுமதி கிடையாது. இரண்டாவதாக அதற்கும் பேருந்திற்கு செலவாகும். தினமும் சராசரியாக 14மணி நேரம் முதல் 16மணி நேரம் வேலை பெண்டை கழட்டி விடுவார்கள்.

இந்த சொந்த கதை சோக கதையை இத்துடன் நிறுத்திக்கொள்வோம். இல்லையென்றால், நான் ஏதோ உண்மையை ஏழுதினால் கூட, என் மீது கழிவிரக்கம் வருவதற்காக எழுவது போலாகிவிடும். அதனால் இத்துடன் சுபம் போட்டுவிட்டு, சொல்ல வந்த விஷயத்திற்கு போய்விடலாம். அங்கே (நான் வேலை செய்த உணவகத்தில்) மாதச் சம்பளம் போக தினமும் பேட்டா காசு கொடுப்பார்கள். அன்றைய நிலையில் 5ரூபாய் முதல் 7ரூபாய்க்குள். சரியாக கடையை அடைத்து பேட்டா கையில் வந்தவுடன் அருகில் இருக்கும் திரையங்குகளுக்கு பரந்து விடுவேன் அப்போழுது நான் சிறுவன் என்பதால் பெண்கள் கவுண்டரில் புகுந்து ஈசியாக டிக்கெட் எடுத்துவிட முடியும் கிட்டதட்ட 2மாதங்களில் 40படங்களுக்கு மேல் பார்த்திருப்பேன். அத்தனையும் இரவு காட்சிகள். 2நாட்கள் பேட்டா காசை சேர்த்தால் படத்திற்கு போய்விடலாம். சில நேரங்களில், ஆள் பற்றாக்குறையால், சில மணி நேரங்கள் கூடுதலாக வேலை செய்து வரும் பணத்தையும் வைத்து, திரைப்படங்களாக பார்த்து தள்ளிக் கொண்டிருந்தேன்.

தமிழ்நாட்டில் மது குடிப்பவர்களும், கஞ்சா குடிப்பவர்களும் பெரும்பாலும் உடல் உழைப்பாளிகள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உடல்வலி, மற்றும் எவ்வளவு உழைத்தும் ஏழ்மை. கிட்டதட்ட அந்த வயதில், என்முன் மேற்சொன்ன இரண்டு வாய்ப்புகளும் இருந்தன. என்னுடைய சக தோழர்களாக பணிபுரிந்தவர்களுக்கே அந்த பழக்கங்கள் உண்டு. என்னையும் வற்புறுத்துவார்கள் தவிர்த்துவிடுவேன். மற்றவர்களுக்கு உடல்வலிக்கும், ஏழ்மைக்கும், உடம்பையும், மனதையும் கெடுக்கும் மதுவும், கஞ்சாவும். ஆனால் நான் அந்த இடத்தில் இல்லாமல் திரைப்படம் பார்க்க சென்றுவிடுவேன். தேர்தெடுத்து எல்லாம் பார்ப்பதில்லை, அது எம்ஜியாரின் நினைத்ததை முடிப்பவனாகவும் இருக்கலாம், கமலின் வெற்றி விழாவாகவும் இருக்கலாம். அந்த சமயத்தில் நான் பக்கா ரஜினி ரசிகன். அந்த வயதில் வீட்டின் பொருளாதார சூழ்நிலை புரியாமல் இப்படி நம்மை வேலைக்கு அனுப்பி விட்டார்களே என்ற எரிச்சல், எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்ட தாழ்வு மனப்பான்மை, 16மணி நேரம் சக்கையாக பிழிந்தேடுக்கும் வேலைபளு, இப்படி எல்லாவற்றையும் தூக்கி ஒரு மூலையில் கிடாசிவிட்டு, இவையனைத்தையும் மறந்து இரண்டரை மணிநேரங்கள் திரையரங்கினுள் அமர்ந்திருக்கும் அந்த தருணங்களை வாழ்வில் மறக்கவே முடியாது. என்னை பொருத்தவரை அந்த வயதில் எனக்கு அது ஒரு தியானத்தை போல என்று சொன்னால், அது மிகையல்ல.

திரைப்படம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படாமலே இருந்திருந்தால், அப்போழுது இருந்த சூழலில் நான் மிக மோசமான மனிதனாக மாறியிருக்க 100சதவித வாய்ப்புகள் கண்முன்னே இருந்தது. அந்த வயதில் வாழ்வின் நிதர்சனத்தை புரிந்து கொள்ள முடியாமல், அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், தடுமாறிய என்னுடைய மனதிற்கு மிகச்சிறந்த வடிகாலாக இருந்தது திரைப்படங்களே. இப்படி நான் மட்டுமல்ல, கிட்டதட்ட அதன் பிறகு 13 வருடங்கள் அதே உணவகத்துறையிலேயே (இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு வெவ்வெறு காரணங்களால் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுவிட்டேன்) என்னுடன் பணிபுரிந்த நிறைய நண்பர்களுக்கு திரைப்படம் பார்ப்பதும் அதை பற்றி விவாதிப்பதும் தான் எங்களின் கஷ்டங்களை மறக்கும் அற்புதமான தருணங்கள். இப்போழும் நிறைய சந்தர்ப்பங்களில் நண்பர்களுடன் விவாதிக்கும் போது, அது எதை பற்றியதாக இருந்தாலும் என்னுடைய கருத்துக்கள் நான் பார்த்த திரைப்படத்தில் இருந்து தான் வரும், உதாரணத்திற்கு எனக்கு இப்பொழுது திருமணமாகிவிட்டது. என் மனைவியிடம் அவ்வை சண்முகியில் வரும் ஒரு காட்சியை பற்றி அடிக்கடி சொல்லிக்காட்டி கொண்டே இருப்பேன். அப்படத்தில் வரும் ஒரு காட்சியில், கமலும் மீனாவும் தங்களுக்கு திருமணமானவுடன் ஒரு பிள்ளையார் சிலை முன்பு நின்று வேண்டுவார்கள். அப்போழுது கமல், மீனாவிடம் நீ என்ன வேண்டினாய் என்று கேட்பார். அதற்கு மீனா, நாம் இருவரும் வாழ்வின் கடைசி நிமிடம் வரை சண்டை போடாமல் விட்டுக்கொடுத்து இணைபிரியாமல் சந்தோசமாக வாழ வேண்டும் என்று வேண்டினேன் என்பார். அதற்கு கமல், அது நமக்கே தெரிய வேண்டாமா, இதை எதற்கு கடவுளிடம் வேண்ட வேண்டும் என்பார். மிக அட்டகாசமான காட்சி அது. திருமணமாகி கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் பல தம்பதிகளை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கான சம்மடி அடி காட்சி அது. அவ்வைசண்முகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் தான் என்றாலும், சினிமா என்பது கலை, அது வெறும் வணிகம் கிடையாது என்று சொல்லும் நண்பர்களால், கழுவிகழுவி ஊற்றப்பட்டது. இருக்கலாம் ஆனால் ஒரு திரைப்படம், அது கலை படமாக இருந்தாலும் சரி, கமர்சியல் படமாக இருந்தாலும் சரி, இல்லை இரண்டும்கெட்டானக இருந்தாலும் சரி, அரங்கினுள் வந்தமரும் ரசிகனை அவன் வாழ்வியலோடு இணைத்து பார்க்கும் காட்சிகளோடு பொருந்திபோய்விட்டாலே படம் வெற்றி தான். என்னை பொருத்தவரை எனக்கும் சரி என்னோடு இப்போழுதும் பயணித்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட நண்பர்களுக்கும் சரி எங்களின் கஷ்டங்களையும் மனவேதனைகளையும் மறக்கச்செய்து இன்றும் எங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் திரைப்படம் தான் எங்களுக்கான பகவத்கீதை வேதாகமம் திருக்குரான் எல்லாம், இதை படிக்கும் சில நண்பர்களுக்கு நான் சொல்வது மிகையாக கூட இருக்கலாம். எங்களிடத்தில் இருந்து வாழ்ந்து பார்த்தால் தான் அதை உணர முடியும்.

அதனால் தான் சொல்கிறேன் இன்றைக்கும் சரி என்றைக்கும் இங்கே உள்ள மக்கள் சார்ந்த சமூகம் ஒன்றும் அடிமுட்டாள்கள் கிடையாது. ஒரு திரைப்படம், அது கலை படமாக இருந்தாலும் சரி, கமர்சியல் படமாக இருந்தாலும் சரி, இல்லை இரண்டும்கெட்டானக இருந்தாலும் சரி, அரங்கினுள் வந்தமரும் ரசிகனை அவன் வாழ்வியலோடு இணைத்து பார்க்கும் காட்சிகளோடு பொருந்திபோய்விட்டாலே படம் வெற்றி தான். ஆனால் இங்கே பொதுவான ஒரு கருத்து ஒரு சாரரால் எப்பொழுதும் வலியுறுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது அது தமிழின் கமர்சியல் படங்கள் என்று அறியப்படும் படங்கள், பெரும் தோல்வியடைய வேண்டும், யதார்த்தமான படங்கள் மட்டுமே வெற்றியடைய வேண்டும் என்றும், இந்த சமூகம் அதை செய்ய தவறுகிறது, அதனால் இந்த சமூகம் உருப்படவே உருப்படாது என்ற கருத்தை வலியுறுத்தி கொண்டே இருக்கிறார்கள்.

அப்படிபட்ட நல்ல படமாக வலியுறுத்தப்பட்டு வெளியான ஒரு திரைப்படம் மிகப்பெரிய தோல்வியானது ஏன்? அது எந்த திரைப்படம்? இன்னுமொரு சந்தர்ப்பத்தில்.....

Tuesday, December 3, 2013

விடியும்முன் - இது விமர்சனமல்ல ஆனால்? (திரைப்படம் கலையா? வணிகமா? அல்லது கலை சார்ந்த வணிகமா?)


சமீபத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்திற்கு பிறகு திரையரங்கின் திரைக்குள் என்னை முழுமையாக உள்ளிழுத்த திரைப்படமிது. என்னுடைய திரைப்படம் சார்ந்த கருத்துக்கள், மற்றும் ரசனை என்பது, என்னுடைய இத்தனை வருட வாழ்வியல் சார்ந்த அனுபவம், வாசிப்பு மற்றும் கடந்து வந்த மனிதர்கள், இவற்றை சார்ந்தே தோன்றுவன என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. அந்த வகையில் விடியும் முன் திரைப்படம் என்னனை முழுமையாக வசீகரித்தது.

தற்போதைய சூழலுடன் ஒப்பிட்டு பார்த்தால், இப்பொழுது வெளியாகும் திரைப்படங்களில் அடிப்படையாக இருக்கும், தவிர்க்கவே முடியாது என்று சொல்லப்படும், கதாநாயகன், கதாநாயகி, காதல், காமெடி, கனவுபாட்டு, பிரம்மாண்ட சண்டைகாட்சிகள், குத்துப்பாட்டு என்ற வரிசையான சினிமா இலக்கணங்கள் எதுவும் இல்லாமலேயே ஒரு அட்டகாசமான கிரைம் திரில்லரை தரமுடியும் என்று, ஆணித்தரமாக நீருபித்திருக்கும் திரைப்படம். என்னளவில், எந்த ஒரு திரைப்படத்தை பற்றிய கருத்தோ விமர்சனமோ எழுதும் பட்சத்தில், அத்திரைப்படத்தின் கதையை பற்றி முழுமையாகவோ அல்லது அரைகுறையாகவோ எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை, அதனால் இப்படத்தின் கதையை தவிர்க்கிறேன்.

இப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஓன்று, இதன் படத்தொகுப்பு சமீபத்திய டிரண்ட் என்று கொண்டாடப்படும், திரையில் அரை நொடிக்கொருமறை சடார் சடாரேன மாறிக்கொண்டே இருக்கும் காட்சிகள் போல் அல்லாமல், ஒவ்வொரு காட்சியும் அதன் அதனுடைய நிதானத்துடன், ஆனால் அதன் வீரியம் குறையாமல் நகர்வது தான் இப்படத்தின் பலம். ஆனால் இணையத்தில் சில நண்பர்களின் விமர்சனத்தில் கூட அதை குறையாக குறிப்பிட்டிருப்பதை கவனித்தேன். எல்லாவற்றையுமே அவசரமாக அடையத்துடிக்கும் மனநிலையில் வாழ பழகிய பிறகு இந்த நிதானம் கண்டிப்பாக சிலரை எரிச்சடையவே வைக்கும். ஆனால் இத்திரைப்படத்தின் அந்த நிதானம் தான் அழகே. இப்படத்தின் இறுதி காட்சி கூட சினிமாட்டிக்காக உள்ளது என்று பரவலாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் அது தான் இத்திரைப்படத்தின் பலமே. படம் முழுவதும் வியாபித்திருக்கும் இருள் சூழ்ந்த சமுகத்தின் குருர பக்கங்களுக்கு நடுவில், எங்கேயெனும் ஒரு மூளையில் இருந்து கண்டிப்பாக ஓர் வெளிச்சம் வந்தே தீரும், நீ தொடர்ந்து போராடினால் என்று, சொல்வதாகவே இப்படத்தின் இறுதி காட்சியை பார்க்கிறேன்.

கடைசியாக முற்காலத்தில் பல ராஜ்ஜியங்கள் அழிந்ததே பெண்ணாசையால் தான் என்று சொல்வார்கள். இதற்கு ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் விதி விலகல்ல. ஆனால் இன்றைய சூழலலில் அந்த இடத்தை மனிதனால் உருவாக்கபட்ட பணம் ஆக்கிரமித்துவிட்டது. அதை இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் நமக்கு உணர்த்தியபடியே நகர்கிறது. சலூனில் முகச்சவரம் செய்து கொண்டிருக்கும் பெண் சொல்லும் பாக்கெட் மணிக்காக, சலூ£ன்காரன் ரேகாவிடம் சொல்லும் இந்த வேலையை மட்டும் முடிச்சால் நல்ல பணத்துடன் செட்டிலாகிவிடலாம் என்பதாக, தன்னிடம் ஆதீத பணம் இருப்பதால், அந்த பணத்தை கொண்டே தன் மன வக்கிரங்களை நிறைவேற்ற துடிக்கும் பெரியைய்யா. இப்படி படம் முழுவதும் பணத்தாசையின் கோரமுகத்தை அது எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை பொட்டில் அடித்தார்போல் சொல்கிறது. ஒரு வேலை பெரியைய்யா ஒரு வேளை சோற்றுக்கே வக்கில்லாதவனாக இருந்திருந்தால் இப்படி தன் வக்கிரத்தை காட்டியிருப்பானா கண்டிப்பாக சந்தேகம் தான்.

பொதுவாக நான் படித்த வரையில் சில நண்பர்கள் மற்றும் ஒரு சாரரால் இங்கே பொதுவான ஒரு கருத்து எப்பொழுதும் வலியுறுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது அது தமிழின் கமர்சியல் படங்கள் என்று அறியப்படும் படங்கள், பெரும் தோல்வியடைய வேண்டும், யதார்த்தமான படங்கள் மட்டுமே வெற்றியடைய வேண்டும் என்றும், இந்த சமூகம் அதை செய்ய தவறுகிறது, அதனால் இந்த சமூகம் உருப்படவே உருப்படாது என்ற கருத்தை வலியுறுத்தி கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு விஷயம் புரியவில்லை, இங்கே உள்ள மக்கள் சார்ந்த சமூகம் ஒன்றும் அடிமுட்டாள்கள் கிடையாது.ஒரு திரைப்படம், அது கலை படமாக இருந்தாலும் சரி, கமர்சியல் படமாக இருந்தாலும் சரி, இல்லை இரண்டும்கெட்டானாக இருந்தாலும் சரி, அரங்கினுள் வந்தமரும் ரசிகனை அவன் வாழ்வியலோடு இணைத்து பார்க்கும் காட்சிகளோடு பொருந்திபோய்விட்டாலே படம் வெற்றி தான். விடியும் முன் திரைப்படமும் மிகப்பெரிய பார்வையாளகளுடன் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடவில்லை என்றாலும் நான் பார்த்த வரையில் (மதுரையில்) குறிப்பிடதக்க பார்வையாளர்களுடனே ஓடிக்கொண்டிருக்கிறது. மேலே நான் குறிப்பட்டுள்ளது போல் திரைப்படம் என்பது கலையா? வணிகமா? அல்லது கலை சார்ந்த வணிகமா? இவை மூன்றையும் தாண்டி திரைப்படம் மனித மனதுக்கான வடிகால் எப்படி பார்க்கலாம் மீண்டும்..... இன்னுமொரு திரைப்படத்துடன்.....