Monday, June 21, 2010

ராவணன் ராவணன் - இந்திய சினிமாவின் சாபக்கேடு

இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு, மணிரத்னம் என்ற மாபெரும் இயக்குநர், ஆஸ்கர் விருது புகழ் ஏ.ஆர்.ரகுமான், இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்கள் இருவர், மிக சிறந்த கலை இயக்குநர், மிக பிரம்மாண்டமான இயற்கையான இடங்கள் தமிழிலும், இந்தியிலும் சிறந்த நடிப்பாற்றல் கொண்ட நல்ல ரசிகர் கூட்டத்தை தக்க வைத்திருக்கும் நடிகர்கள் இப்படி பலவிதமான எதிர்பார்ப்புகளை தூண்டி இந்திய ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம். மணிரத்தினத்தின் ராவணன் மேலே சொன்னவை அனைத்தும் படம் வெளிவறுவதற்கு முன் உருவான அல்லது உருவாக்கப்பட்ட பிம்பங்கள்.

சென்ற வாரம் வெள்ளியன்று படம் வெளியானது. வெளிவருவதற்கு முன் உண்டான எதிர்பார்ப்புகள் அனைத்தும் படம் வெளியான பின் யானை காலில் மிதிபட்ட மனிதனின் தலைபோல் மொத்தமாக நசுங்கிவிட்டது. எல்லாவற்றிலும் மிகச்சிறந்தவைகளை தேர்ந்தேடுத்த இயக்குநர், திரைகதையில் கோட்டை விட்டதன் விளைவு படம் அட்சரசுத்தமாக மரண அடிவாங்கியிருக்கிறது. என்னதான் டெக்கினிக்கலாக உலகதரம் என்று மார்தட்டி கொண்டாலும் திரைகதையில் கோட்டைவிட்டால் எவ்வளவு மோசமானதோரு படமாக அது இருக்கும் என்பதற்கு இந்த படம் ஆகச்சிறந்த உதாரணம்.

படத்தின் கதையை ஏற்கனவே நிறைய எழுதிவிட்டார்கள் என்பதால் அது தேவையில்லை. படத்தில் ஒடுக்கப்படும் பழங்குடி மக்களின் தலைவனாக சொல்லப்படும் கதாநாயகன் அம்மக்களின் ஆதரவோடு போலிசுக்கு எதிராக வன்முறைகளை நிகழ்த்தி கொண்டே இருக்கிறான் என்பது போன்ற காட்சிகள் படம் முழுவதும். ஆனால் ஏன் அம்மக்கள் போலிசுக்கு எதிராக போராடுகிறார்கள்?, அவர்களின் பிரச்சனை என்ன?, ஏன் அவர்கள் கதாநாயகனை தலைவனாக கருதுகிறார்கள்?, அவன் அம்மக்களுக்காக என்ன செய்தான்?, அம்மக்களுக்கான வாழ்வியல் பிரச்சனை என்ன? இப்படிபட்ட பலவிதமான கேள்விகள். ஆனால் இவற்றிற்கான விடை படத்தின் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. ஏனென்றால் அதை திரைகதையில் கொண்டு வரும் தைரியம் இயக்குநருக்கு இல்லை. ஒடுக்கப்படும் பழங்குடி மக்களின் பிரச்சனையை ஒரு மேட்டுக்குடியின் பார்வையிலேயே பார்த்தன் விளைவு இது. இந்த லட்சணத்தில் அவரிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் தந்த பதிலும் "நாயகன், பாம்பாய், இருவர், குரு என உங்க ளுடைய அனைத்துப் படங்களுமே ஏதேனும் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இயக்குகிறீர்கள். 'ராவணன்' படத்தில்கூட மாவோயிஸ்ட் பிரச்னையைத் தொட்டிருப்பதாக ஒரு தகவல். உங்கள் படத்தின் மூலம் ஏதேனும் மெசேஜ் சொல்ல விரும்புகிறீர்களா?" என்று மணிரத்னத்திடம் கேட்க, "ஒரு படம் இயக்கும்போது அந்தந்தக் காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களையும் சேர்த்துத்தான் படமெடுக்க முடியும். கண்களை மூடிக்கொண்டு கற்பனையான விஷயங்களை வைத்து மட்டுமே படமெடுக்க என்னால் முடியாது. என் படங்களில் உண்மைச் சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால், மெசேஜ் சொல்ல நான் ஒன்றும் அரசியல்வாதியோ, ஞானியோ கிடையாது. என் வேலை படம் எடுப்பது. அதில் மக்களின் உணர்வுகளைச் சொல்கிறேன். அவ்வளவுதான்!" (நன்றி ஆ.வி) எந்த மக்களின் உணர்வை இவர் குறிப்பிடுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். கொடுமைடா சாமி.

படத்தின் இன்னுமொரு முக்கியமான கதாபாத்திரத்தில் வையாபுரி திருநங்கையாக நடித்திருக்கிறார். இந்திய திரைபடங்களை உலக அரங்குக்கு எடுத்து செல்லும் இயக்குநர், சர்வதேச தரத்தில் படமெடுப்பவர், (தன்னை இயக்குநர் பாலாவின் ரசிகர் என்றுவேறு சொல்லிகொள்பவர்.) இன்றும் இந்திய சினிமாவில் பல இளைஞர்களுக்கு ஆதர்சனம், ஒட்டு மொத்த இந்திய திரைஉலகமே கொண்டாடும் இயக்குநர் என்று போற்றப்படும் ஒருவரால் ஒரு திருநங்கை கதாபாத்திரத்தில் ஒரு திருநங்கையையே நடிக்க வைக்கும் தைரியம் கூட இல்லை. இவர் தான் இந்திய சினிமாவை உலக அரங்குக்கு இட்டு செல்லபவரா? விளங்கிவிடும் இந்திய சினிமா.