Sunday, April 4, 2010

மீண்டும் நீயானா நானாவும் ஆண்களுக்கும் ஆப்பும்

இந்த மாதம் ஒளிபரப்பான நீயா நானாவில் ஒரு தலைப்பு. இன்றைய இளைய சமுதாய ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் எப்படி புரிந்துகொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கிடையே புரிதல்கள் எப்படி இருக்கிறது, பரஸ்பரம் இருவரும் நடந்து கொள்ளும் விதம் மற்றவர்களுக்கு சரியாக புரிகிறதா என்பது தான் தலைப்பு. இன்றைய தலைமுறை ஆண்களும், பெண்களும் தங்களிடமுள்ள எதிர்பாலினத்தின் மீதான சந்தேகங்களை, பரஸ்பரம் கேட்டு தெரிந்து தெளிவாகி கொள்வது தான், நிகழ்ச்சியின் நோக்கம்.

ஆண்கள் பகுதியில் இருந்து கேள்விகனைகள் வர ஆரம்பிக்க, கேள்விகளுக்கு பெண்களிடத்திலிருந்து விதவிதமான பதில்கள். அதை ஆண்கள் ஆமோதித்தவாறே கேட்டுக்கொண்டு இருந்தனர். நிகழ்ச்சியும் மிக சுவாரசியமாக ஜாலியாக போய்கொண்டு இருந்தது. இப்பொழுது பெண்களுக்கான நேரம் பெண்கள் கேள்விகள் கேட்க ஆண்கள் பதில் சொல்ல வேண்டும். பெண்கள் கேள்விகள் கேட்க ஆண்கள் பதில் சொல்ல ஆரம்பித்தார்கள். நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த எனக்கு சிறு நெருடல். தங்களுக்கான கேள்விகளுக்கு பெண்கள் பதில் சொல்லும்போது, பெரும்பாலான ஆண்கள் ஏன் முழுவதுமாக கூட அவர்கள் தரப்பில் இருந்து, ஒரு மறுப்போ பெண்கள் சொல்வது பொய் என்பது போலவோ எந்த ரியாக்சனும் வரவில்லை. பெரும்பாலான பெண்களின் பதில்களுக்கு, ஆண்கள் அதை ஏற்கும் முகபாவத்தோடே கேட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால் ஆண்கள் கூறிய எந்த ஒரு பதிலையும், விளக்கத்தையும் பெரும்பாலான பெண்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை என்பது, அவர்கள் முகத்தின் ஒவ்வொரு ரியாக்சனிலும், நடவடிக்கையிலும் அப்பட்டமாக தெரிந்தது. அதை கேமரா ஒவ்வொரு பெண்ணின் அருகாமை காட்சியின் மூலம் காட்டிக்கொண்டே இருந்தது. (கேமராமேன் அனுபவசத்தாராக இருக்ககூடும் மிகச்சரியாக பெண்களை புரிந்துவைத்து காட்டி கொண்டிருந்தார்)

இப்படி போய் கொண்டிருந்த நிகழ்ச்சியில், பெண்களின் ஆடைபற்றி பேச்சு திரும்ப, ஆண்களிடமிருந்து பெண்களின் ஒரு சில ஆடைகளுக்கு ஆட்சேபம் வர, அதற்க்கான காரணத்தை ஆண்களிடத்தில் நிகழ்ச்சியை நடத்தும் கோபி கேட்டபோது, ஆண்களிடதிலிருந்து வந்த பதில், நாங்கள் காதலிக்கும் போது காதலியை மனைவிபோல் தான் பாவிக்கிறோம், அதனால் எங்களின் குடும்ப கெளரவம் கலாசாரம் எல்லாம் என் மனைவியாக வரப்போகும் பெண்ணிடத்திலும் நாங்கள் எதிர்பார்கிறோம். பொதுஇடத்தில் பெண்கள் உடுத்தும் உடை என்பது மிக சென்சிடிவான தாக்கத்தை ஏற்படுத்தும். அது எந்த காரணத்துக்காவும் எங்கள் குடும்பத்தின் மீதான மரியாதையை குறைக்கும் விதமாக இருக்ககூடாது என்பது ஆண்களின் பதிலாக இருந்தது. இதை குறிப்பாக காதலியை மனைவிபோல் நாங்கள் பாவிக்கிறோம் என்பதை பெண்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் நிகழ்ச்சி நடத்தும் கோபியே கடுப்பாகி ஏன் காதலிக்கும்போது காதலியை மனைவிபோல் நினைப்பதில் என்ன தவறு என்று கேட்க பதிலே இல்லை. முன்புபோரு முறை நான் நண்பர்களுடன் மாயாஜால் போய் படம் பார்க்கவேண்டும் என்று போயிருந்தோம். அப்போழுது நாங்கள் கண்ட காட்சி நாம் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா என்று சந்தேகத்தை வரவழைத்தது. அதற்கு காரணம் அங்கு வந்த பெண் ஒருவர் உடுத்தியிருந்த உடை அவர் அநேகமாக 12ம் வகுப்போ அல்லது கல்லூரி முதலாம் ஆண்டோ படித்துகொண்டிருக்கலாம். பெண்கள் டென்னிஸில் ஒரு குட்டை பாவடையுடன் ஆடிக்கொண்டிருப்பார்களே அதேதான் அவரின் உடை. கிட்டதட்ட பேண்டிசுக்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. அதுவும் எல்லா மக்களும் வந்துபோகும் ஒரு பொது இடத்தில் பெற்றோரோடு சர்வ சாதாரணமாக அலைந்து கொண்டிருந்தார். அங்கிருந்த அனைத்து ஆண்களின் கண்களும் ஏன் பெண்களின் கண்கள் கூட அவர் மீது தான் இருந்தது. இது நடந்தது 3வருடங்களுக்கு முன்பு. அப்படியென்றால் கலாசார புரட்சி போகும் வேகத்தில் உடை அளவை நினைத்தால் மயக்கம் தான் வருகிறது. இந்த வேகத்தில் போனால் வருங்கால கணவர்களுக்கு, மனைவியின் உடை விசயத்தில் பெரிய செலவு இருக்காது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் டாக்டர் ஷாலினி. அவர் சொன்ன கருத்து ஆண்கள் பொதுவாக எப்போழுதும் உழைத்து குடும்பத்தை காப்பாற்றுவதையும் தன் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் மட்டுமே அதிகம் சிந்திபவர்கள். அதை நோக்கிதான் அவர்கள் ஓடிகொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் தங்களின் சின்ன சின்ன மாறுதல்களுக்கு கூட (உதாரணமாக தான் புதியதாக ஒரு சேலை வாங்கி கட்டினால் கூட அதை ஆண்கள் கவனித்து பாராட்ட வேண்டும் என்று நினைப்பது) ஆண்களிடத்திலிருந்து கருத்தையும், பாராட்டையும் எதிர்பார்கிறார்கள். ஆனால் ஆண்கள் அதை கவனிப்பது இல்லை. இதைபோல் சின்ன சின்ன முக்கியமில்லாத காரணங்களுக்காக தான் குடுப்பத்தில் சண்டையே. இப்படிபட்ட பெண்களிடத்தில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கும் கணவன்மார்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அதற்கு அடுத்த வாரம் நீயாநானாவில் செல்போன் பற்றி முக்கியமான விவாதம். விவாதம் சுவாரஸ்யமாக போய் கொண்டிருந்தது இடையில் கோபி ஒரு தரப்பினரை நோக்கி ஒன்றுக்கும் மேற்ப்பட்ட செல்போன்கள் யார் யார் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். 3,4,5 என்று பரவலாக பதில் வந்தது. ஆனால் அதிலிருந்து வந்த ஒரு பெண்ணின் பதில் தான் ஹைலைட்டே அவர் தான் 20செல்போன்கள் வைத்திருப்பதாக சொன்னார். 20செல்போன்கள் என்றவுடன் எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. இத்தைனைக்கும் அந்த பெண்ணின் வயது 19தான். இரண்டு மூன்று செல்போன்கள் வைத்திருப்பவர்கள் சொன்ன காரணங்கள் கூட ஒரளவு ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. இன்னொன்று அவர்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தார்கள். இந்த பெண் இன்னும் பள்ளி படிப்பயே பூர்த்தி செய்யவில்லை. இதில் அந்த பெண்ணுக்கு தான் 20செல்போன்கள் வைத்திருப்பது சாதனைபோல் காட்டிகொண்டார். அவரின் பெற்றோரை நினைத்து கோபப்படுவதா அல்லது வருத்தபடுவதா தெரியவில்லை. நானும் பல பெண்களிடத்தில் கவனித்திருக்கிறேன். எல்லாமே தேவைக்கு அதிகமாக இருந்தால் கூட அவர்கள் திருப்தி அடைவதில்லை. அது சேலையில் ஆரம்பித்து செருப்பு வரை அனைத்திலும். ஆண்கள் அனைவரும் இவர்கள் தேவையை பூர்த்தி செய்தே தங்கள் வாழ்க்கையை தொலைக்க வேண்டும் போல.